இந்தியா
காங்கிரஸை கிழி கிழியென கிழித்த வைகோவை பாராட்டிய மன்மோகன் சிங்!
![Vaiko and manmohan 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Vaiko-and-manmohan-1.jpg)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உரையில் வைகோ காங்கிரஸை கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் நேற்று பாஜக கொண்டு வந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவை எதிர்த்து கடுமையாக உரையாற்றினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. உச்சக்கட்ட கோபத்தில் வைகோ உரையாற்றியது நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்த உரையில் வைகோ காங்கிரஸ் கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்ததாகவும், காங்கிரஸ் தான் காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் எனவும் மிகக்கடுமையாக வாதங்களை முன்வைத்து பேசினார் வைகோ. மேலும் பாஜகவின் தற்போதையை நிலைப்பாட்டையும் விமர்சித்து பேசினார்.
இந்நிலையில் மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகோ, மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது. நீங்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றியதைப் பார்த்தேன். அருமையாக இருந்தது என மன்மோகன் சிங் பாராட்டியதாக கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் வைகோ காங்கிரஸை விமர்சித்து பேசியதை மன்மோகன் சிங் பாராட்டினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.