தமிழ்நாடு
நீக்கப்பட்ட மணிகண்டனுக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு!
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி இரவு நீக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் மீண்டும் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக அதிமுக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தனை நாள் வரை எந்த ஒரு அமைச்சரையும் மாற்றாமல் ஆட்சியை நடத்தி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கி அந்தத் துறையை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் ஒப்படைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வரை சந்திக்கப்போவதில்லை என அதிரடியாக பேட்டியளித்தார் மணிகண்டன். இந்நிலையில் ராஜபாளையத்தில் இன்று கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யாருடைய வளர்ச்சியையும், தடுக்கவோ கெடுக்கவோ மாட்டார். அமைச்சர் மணிகண்டன் கொடுத்த பேட்டி கட்சிக்குள் ஒற்றுமையைக் குலைத்து விடுமோ என்ற நோக்கத்தில்தான் பதவி பறிக்கப்பட்டுள்ளது. திரும்பவும் மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது என்றார்.