இந்தியா
பெகாசஸ் மென்பொருளை என்னிடமும் விற்க முயற்சித்தார்கள்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி தகவல்
உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸ் மென்பொருளை என்னிடமும் விற்க முயற்சி செய்தார்கள் என்றும் அதற்காக 25 கோடி ரூபாய் இஸ்ரேல் நிறுவனம் கேட்டதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கி அரசியல் பிரபலங்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது என்பதும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெகாசஸ் விற்க என்னை அணுகினார்கள் என்றும் அதற்காக 25 கோடி கேட்டார்கள் என்றும் ஆனால் இது போன்ற தேச விரோத செயல்களை செய்ய நான் விரும்பவில்லை என்றும் அப்போதே இதை வாங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டேன் என்றும் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு இந்த மென்பொருளை வாங்கினார் என்று அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தீவிரவாதிகளை கண்காணிப்பதற்கு என்று மட்டுமே சொல்லி இஸ்ரேல் நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை விற்பனை செய்தது என்றும் ஆனால் உலகம் முழுவதும் இந்த மென்பொருள் அரசியல் எதிரிகளை கண்காணிக்கவே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.