இந்தியா
‘நேரம் தந்தால் பிரதமரை சந்திக்கத் தயார்’- எதிர் அணியை வலுவாக்க டெல்லி பயணிக்கும் மம்தா!
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆகப் பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி பயணம் செய்ய உள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பதுடன் முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். இன்னும் மூன்று ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வருவதை அடுத்து தற்போதிலிருந்தே அதற்கான ஆயத்தப் பணிகளை முன் நின்று ஆரம்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “நான் மீண்டும் முதல்வர் ஆகப் பதவி ஏற்ற பின்னர் தற்போது தான் கொரோனா பரவல் சற்று தணிந்துள்ளது என்பதால் டெல்லி பயணிக்கலாம் என இருக்கிறேன். நண்பர்களைச் சந்திக்கத் தான் இந்த டெல்லி பயணத்தை மேற்கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் சில முக்கிய நண்பர்களைச் சந்திக்க உள்ளேன்.
இதுவரையில் பிரதமரை நான் சந்திக்கவில்லை. நேரம் கொடுத்தார்கள் என்றால் நான் பிரதமரைச் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறேன். இன்னும் தேதி குறிக்கவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டுமல்லாது மம்தா அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.