இந்தியா
நான் முதல்வராக தொடர விரும்பவில்லை: மம்தா அதிரடி!
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதில் மேற்கு வங்கம் மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளிலும், திருணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 2014 தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் இந்த தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியது திருணமூல் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று திருணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவு தொடர்பாக ஆலோசிக்க அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. மம்தா பானர்ஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதைக் கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்குப் பயமில்லை.
கடந்த 6 மாதங்களாக என்னால் பணியாற்ற முடியவில்லை, அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். இன்று நடைபெற்ற கூட்டத்தில், நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று கட்சியினரிடம் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் பதவி விலகுவேன் என்று சொன்னேன். ஆனால் கட்சியினர் இதை நிராகரித்துவிட்டனர் என்றார் மம்தா.