இந்தியா
புல்வாமா தாக்குதலில் பாஜக மீது சந்தேகம்: மம்தா அதிரடி கேள்விகள்!
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தாக்குதல் இந்த நேரத்தில் நடத்தப்பட்டிருப்பதில் சந்தேகம் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதல் பற்றி இதுவரை எந்த அரசியல் தலைவரும் தொடுக்காத கேள்விகளை மம்தா பானர்ஜி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா, புல்வாமா தாக்குதல் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பிப்ரவரி 8 -ம் தேதியே மத்திய அரசுக்கு உளவுத்துறை ஏஜென்சிகளிடம் இருந்து, தேர்தலை முன்னிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தாக்குதல் பற்றிய எச்சரிக்கை அனுப்பப்பட்ட பின்னரும் துணை ராணுவப்படையினரின் 78 கான்வாய்கள் ஒரே நேரத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டது ஏன்? தேர்தல் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்படாமல் தடுக்கத் தவறியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார். மேலும் இதனை காரணமாக வைத்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேற்கு வங்கத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.