தமிழ்நாடு
வகை தொகையில்லாமல் பரவிய கொரோனா… கேட்டை இழுத்து மூடிய IIT Madras!
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளதாம். இது குறித்து ஐஐடி மெட்ராஸில் பயின்று வரும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
கல்விக் கூடங்களில் சிலவற்றைத் திறந்து கொள்ள தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வளாகத்துக்கு வர அனுமதியளித்துள்ளது ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம். இந்நிலையில் இப்படி வளாகத்திற்கு உள்ளே வந்த மாணவர்களில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மேலும் 700 பேருக்கு கொரோனா இருக்கிறதா என்கிற சோதனையும் எடுக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது வளாகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள குறைந்த விகிதத்திலான மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய கல்வி நிறுவனத்தில் இப்படி கொரோனா பரவியது குறித்து மாநில அரசுத் தரப்பு, லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்தால் இப்படியான தொற்று பாதிப்பு வரும் என்று நாங்கள் ஏற்கெனவே கணித்திருந்தோம் என்றும், இது குறித்து பதற்றப்பட வேண்டாம் என்றும் கூறுகிறது.