தமிழ்நாடு

அதிமுகவில் அதிருப்தியில் மைத்ரேயன்: ஃபேஸ்புக்கில் அதிரடி பதிவு!

Published

on

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் மக்களவை தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட மூன்று குழுக்களிலும் தனது பெயர் இடம் பெறாததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தனது அதிருப்திய ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக அதிமுகவில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி, ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர்கள் செம்மலை, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் எம்.பி ரபி பெர்னர்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரச்சார ஒருங்கிணைப்புக் குழுவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன் மற்றும் வேணுகோபால் எம்.பியும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மூன்று குழுக்களிலும் இடம்பெறாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தனது ஃபேஸ்புக்கில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை.

கழகத்தில் நான் 1999 ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள்.

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன். 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி “வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம் – An Agenda For A Better India” என்ற தலைப்பில் அந்த தேர்தல் அறிக்கை தயாரானது.

அம்மா அவர்கள் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார். அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்மா அவர்கள் திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்தல் அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம் Power point presentation ஆக விளக்க வேண்டும். ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர் திரு.சுனில் செய்யலாம் என்று அம்மா அவர்களிடம் கூறியபோது, “இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும்” என்று அம்மா உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். நான் அறிந்த வரை ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point presentation செய்தது அதுதான் முதல் தடவை.

அடுத்த நாள் காலை அம்மா அவர்கள் கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று அம்மா அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நானும் தான். புன்னகையோடு அம்மா அவர்களும் ஏற்றுக்கொண்ட பிறகு அம்மாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார். “மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார்கள். இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும் என பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் மைத்ரேயன்.

seithichurul

Trending

Exit mobile version