தமிழ்நாடு
அனிதா வீடியோவை நான் பதிவு செய்யவில்லை: மாஃபா பாண்டியராஜன் விளக்கம்!
நீட் தேர்வு காரணமாக உயிரைவிட்ட அனிதாவின் வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனிதா என்ற மாணவி தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அனிதா பேசியது போன்ற ஒரு வீடியோவை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோவில் அனிதா அதிமுகவை ஆதரிப்பது போன்ற கருத்துக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அனிதாவின் சகோதரர் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த டுவிட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அனிதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். எனது டுவிட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகி உள்ளது என்றும் அனிதா பேசுவது போன்ற வீடியோவை யாரோ எனக்கு தெரியாமல் எனது டுவிட்டரில் பதிவு செய்து விட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது டுவிட்டர் பக்கத்தில் அனிதா வீடியோ பதிவிட்டதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.