தமிழ்நாடு
கார் பார்க்கிங் என்ற பெயரில் கொள்ளை: மதுரையில் பயணிகள் அதிருப்தி
மதுரை விமான நிலையத்தில் இருப்பது போன்று மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மதுரை ரயில்வே நிலைய கார் பார்க்கிங் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தனியாருக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி இங்கு பார்க்கிங் செய்யும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முதல் மூன்று மணி நேரத்திற்கு 30 ரூபாயும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 50 ரூபாயும் அதனை அடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 70 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கார் பார்க்கிங் செய்யும் பயணிகளில் ஒருவர் கூறியபோது ’மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி என்று எங்களுக்கு புரியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ரயில்வே நிர்வாகம் ஏன் கார் பார்க்கிங்கை மட்டும் தனியாருக்கு விற்று உள்ளது என்று புரியவில்லை.
இந்த கட்டண உயர்வு காரணமாக தனியார்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இதேபோன்று அடுத்து இரு சக்கர வாகனம் அதிக கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து நாள் ஒன்றுக்கு கார் பார்க்கிங் கட்டணம் இவ்வளவு என வசூலிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ரயில் நிலைய பார்க்கிங்கில் தேவையின்றி வாகனங்களை நீண்டநேரம் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடைமுறையை செயல்படுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.