கிரிக்கெட்

திண்டுக்கல் அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ ஆனது மதுரை பாந்தர்ஸ்

Published

on

சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 இறுதிப் போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடரின் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி [12-08-18] ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த், அபிஷேக் தன்வார் வீசிய முதல் ஓவரிலேயே போல்டாகி ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து, தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய அனிருத் சீதா ராம், லோகேஷ் ராஜ் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 4 ரன்களில் வெளியேறினார்.

அதேபோல் மூன்றாவது ஓவரில் என்.எஸ்.சதுர்வேத் 9 ரன்களில் அபிஷேக் தன்வார் பந்துவீச்சில் வெளியேறினார். நான்காவது ஓவரில் 6 பந்துகளை சந்தித்த வருண் தோத்தாத்ரி ரன் ஏதும் லோகேஷ் ராஜ் பந்தில் வெளியேறினார். அபிஷேக் தன்வார் வீசிய ஐந்தாவது ஓவரில் மோகன் அபினவ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

ஒரு ஓவருக்கு ஒரு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்து மோசமான நிலைக்கு ஆளானது.

ஆறாவது ஓவரில் விவேக் ராஜ் கொடுத்த அடுத்தடுத்து இரண்டு கேட்ச் வாய்ப்புகளை மதுரை அணியினர் வீணடித்தனர். ஆனால், இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள தவறிய விவேக் ராஜ், லோகேஷ்வர் பந்தில் கார்த்திகேயனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான என்.ஜெகதீசன் மற்றும் ஆர்.ரோஹித் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடியது.

பின்னர், அணியின் எண்ணிக்கை 85ஆக இருந்தபோது ஆர்.ரோஹித் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இக்கட்டான சூழ்நிலையில், இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் சிறப்பாக ஆடிய கேப்டன் என்.ஜெகதீசன் 42 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். ஆனால், நீண்ட நேரம் நிலைக்காமல் அடுத்தடுத்த பந்திலேயே அவுட்டானர். அவர், 44 பந்துகளில் [5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து எம்.சிலம்பரசன் 2 ரன்களில் வெளியேறினார்.

19.5 ஓவர்களில் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. மதுரை அணி தரப்ப்பில் அதிகப்பட்சமாக அபிஷேக் தன்வார் 4 விக்கெட்டுகளையும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே தலைவன் சற்குணம் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபள்யூ. முறையில் வெளியேறினார். நான்காவது பந்தில் துஷார் ரஹேஜா 0, ஐந்தாவது பந்தில் கேப்டன் ரோஹித் 0 என அடுத்தடுத்து வெளியேற ஒரு ஓவர் முடிவில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் மற்றும் ஷிஜித் சந்திரன் இருவரும் இணைந்து அருமையாக ஆடினர். இதனால், பவர்பிளே முடிவில் 34 ரன்கள் எடுத்திருந்தனர். இதனையடுத்து, அட்டகாசமாக ஆடிய அருண் கார்த்திக் 41 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். இதனால் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது.

இருவரும் இணைந்து அருமையான பாட்னர்ஷிப் அமைத்ததால் அணி வெற்றியை நோக்கி சென்றது. இதனால், 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அருண் கார்த்திக் 50 பந்துகளில் [4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 75 ரன்களுடனும், ஷிஜித் சந்திரன் 49 பந்துகளில் [3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 38 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

Trending

Exit mobile version