தமிழ்நாடு
கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!
ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்றைய கொடியேற்ற விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடியேற்று விழாவிற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் போர்க்கொடி தூக்கியதால் மீனாட்சி அம்மன் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகிகள் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடைபெறும் என்றும் கோயில் வளாகத்திலேயே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மினாட்சி திருக்கல்யாண வைபவத்திற்கு மட்டும் பக்தர்கள் குறிப்பிட்ட அளவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்ற வைபவங்கள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.