தமிழ்நாடு
தமிழகத்தில் ஆன்லைன், ரம்மி விளையாட்டுகளுக்கு தடை: உயர்நீதிமன்றத்தின் அதிரடி கருத்து!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை செய்யும் அவசர சட்டம் செல்லாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில் இது குறித்த பொதுநல வழக்கு ஒன்றில் தீர்ப்பை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் செல்லாது என்ற நிலையில் தமிழகத்தில் பல இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று பொதுநல வழக்கு ஒன்றை இரண்டு பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் பல்வேறு இடங்களில் பல தரப்பினர்களின் வாழ்வாதாரம் இழந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றும், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை தடை செய்யும் சட்டங்களை இயற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் விரைவில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு தடை குறித்த புதிய சட்டத்தை இயற்றும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக தெரிவித்து இருந்தனர். இது குறித்து ஆறு மாதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தமிழக அமைச்சர் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் அதே கருத்தையே நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை விரைவில் இயற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.