தமிழ்நாடு
மதுரை குழந்தைகள் காப்பக நிர்வாகி கைது: கேரள எல்லையில் பிடிபட்டதாக தகவல்!
மதுரையில் இதயம் காப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் குழந்தை இறந்து விட்டது என பொய் கூறி குழந்தையை லட்சக்கணக்கில் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து தலைமறைவாக இருந்த காப்பக நிர்வாகி சிவகுமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் மதுரை இதயம் அறக்கட்டளை காப்பக நிர்வாகி சிவகுமார் என்பவரும் அந்த காப்பகத்தின் ஊழியர் மதர்சா என்பவரும் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிர்வாகி சிவக்குமாரிடம் நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் அவர் பல குழந்தைகளை விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது. இந்த நிலையில் சிவக்குமாரிடம் இருந்து குழந்தைகளை வாங்கிய இரண்டு பெற்றோர்களையும் காவல்துறை கைது செய்திருப்பதாகவும், மேலும் எத்தனை குழந்தைகள் விற்கப்பட்டது என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரையில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் மற்றும் முதியோர் காப்பகங்களும் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.