தமிழ்நாடு
ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்காக சுற்றறிக்கை: மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் அவர்களின் மதுரை வருகைக்காக மதுரையை சுத்தப்படுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்ததாவது: மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உள்ள வழித்தடத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டுமென்றும் அவர் பயணம் செய்யும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வருகையை ஒட்டி சுற்றறிக்கையை வெளியிட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளரை மதுரை மாநகராட்சி பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படி பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும்’ என்று மதுரை மாநகராட்சி ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆர்எஸ் தலைவரின் வருகைக்காக சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டதை அடுத்து இது திமுக ஆட்சி தானா? என்ற கேள்வி எழுப்பிய பலர் தற்போது இந்த நடவடிக்கைக்கு பின் திமுக ஆட்சிதான் என்று கூறி வருகின்றனர்.