தமிழ்நாடு
மாடு, நாய் வளர்ப்பவர்களுக்கு ரூ.10 உரிமைத் தொகை விதிப்பு- மதுரை மாநகராட்சி
மதுரையில் வீடுகளில் மாடு, நாய் என வளர்ப்பவர்களுக்கு உரிமைத் தொகை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி.
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய், ஆடு, மாடு, எருமை, குதிரை ஆகிய விலங்குகளை வளர்ப்பவர்கள் 10 ரூபாய் செலுத்தி மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் வளர்க்கப்படும் மேற்குறிப்பிட்ட விலங்குகள் சாலைகளில் அலட்சியமாக விடப்பட்டிருந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு விலங்குகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் பல நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறேனும் இடங்களில் ஆடு, மாடு வதை செய்யப்பட்டால் அதற்காக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறைச்சி கடைகள் சுகாதாரமற்ற முறையில் திடக்கழிவுகளைக் கொட்டினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கருத்துகளை அடுத்த 15 நாட்களுக்குள் மதுரை மாநாகராட்சிக்கு பொதுமக்கள் தெரரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.