சினிமா செய்திகள்
சித்தார்த் கூறியது முழுக்க முழுக்க பொய்: என்ன நடந்தது என விளக்கமளித்த அதிகாரி!
மதுரை விமான நிலையத்தில் தன்னையும் தனது பெற்றோரையும் ஹிந்தியில் பேசுமாறு விமான நிலைய அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என மதுரை விமான நிலைய அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் நடிகரான சித்தார்த் சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு தான் கூறியதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் 20 நிமிடங்களுக்கும் மேல் தானும் தனது பெற்றோரும் துன்பத்திற்கு உள்ளானோம் என்றும் எனது பெற்றோர் கொண்டு வந்த பையில் இருந்த நாணயங்களை எடுக்கும் படி கூறினார்கள் என்றும் தொடர்ந்து ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சித்தார்த்தின் இந்த சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் மதுரை எம்பி வெங்கடேஷ் உள்பட பலர் கண்டனத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். சென்னை செல்வதற்காக சித்தார்த் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு 04.15 மணிக்கு வந்தபோது அவரை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் சோதனை செய்தனர் என்றும் அப்போது முகக்கவசத்தை அகற்றுமாறு மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு வழக்கமான பாதுகாப்பு நடைமுறை தான் என்றும் சித்தார்த்தின் குடும்பத்தினரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு 10 நிமிடத்தில் அனுப்பப்பட்டார்கள் என்றும் அவர்களை யாரும் எந்தவித கொடுமையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சித்தார்த் மற்றும் அவரது பெற்றோரை சோதனை செய்தது தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரை சேர்ந்த பெண் அதிகாரி தான் என்றும் அவர் தமிழில்தான் சித்தார்த்திடம் பேசினார் என்றும் ஹிந்தியில் பேசவில்லை என்றும் சித்தார்த்தும் அவருடைய பெற்றோர்களும் தான் ஹிந்தியில் பேசினார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் ஹிந்தியில் பேசியதாக சித்தார்த் கூறுவது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் சித்தார்த்தின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் விமான நிலையத்திலிருந்து அவர் புறப்பட்டது வரை அனைத்து காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும் தேவைப்பட்டால் அதை வெளியிட தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.