இந்தியா
’முதல்வன்’ பட ஸ்டைலில் மேடையிலேயே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்வர்!
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான ’முதல்வன்’ படத்தில் முதல் அமைச்சராக நடித்த அர்ஜுன் மக்கள் குறை கேட்டு உடனடியாக அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த காட்சி தற்போது உண்மையாகவே நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் சமீபத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் அதிகாரிகள் யாராவது முறைகேடு செய்திருந்தால் இந்த கூட்டத்திலேயே என்னிடம் தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனை அடுத்து கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் 2 அதிகாரிகளின் பெயர்களை கோஷமிட்டனர். உமாசங்கர் மற்றும் அபிஷே ரவுத் ஆகிய இரண்டு அதிகாரிகள் இந்த திட்டத்தில் பல மோசடிகள் செய்து தெரிய வந்தது.
இதனை அடுத்து அதே மேடையிலேயே அந்த இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதாக முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்தார். அதுமட்டுமின்றி அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். அவர்கள் ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரித்விபூரின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரிஜேந்திர சிங் ரத்தோர் மறைந்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து முதலமைச்சர் இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ஸ்டண்ட் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.