விமர்சனம்
சார்லியை அப்படியே விட்டிருக்கலாம் – மாறா விமர்சனம்
பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். மாறா (மாதவன்) என்பவன்தான் அந்த ஓவியங்களை வரைந்தது எனத் தெரியவருகிறது. மாறனின் வீட்டில் கிடைக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்தில், சில சம்பவங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதில் உள்ள மனிதர்களைச் சந்தித்து, அவர்கள் கதைகளைக் கேட்கிறாள் பார்வதி. இந்தப் பயணம் அவளை எங்கே இட்டுச் செல்கிறது என்பதுதான் மீதிக் கதை.
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சார்லி படத்தின் ரீமேக் என சொல்லித்தான் இந்த படத்தை தொடங்கினார்கள். இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை பின்னர் பார்க்கலாம். முதலில் இந்த மாறா எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
மாறாவாக மாதவன். ஹீரோ அவர் என சொன்னாலும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி செய்யும் வேலையை இங்கே மாதவன் செய்திருக்கிறார். அதாங்க, ஒரு சில காட்சிக்கு மட்டும் வந்து தலையை காட்டிட்டு போறது. நாயகி ஷ்ரத்தா நடிக்க முயற்சி செய்திருக்கிறார். எல்லா காட்சிக்கும் ஒரே முக பாவனை தான். கொஞ்சம் நடிங்க பாஸ். சோம சுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், மௌலி, அப்புறம் மேரி ஆன்டியாக வரும் மீனாட்சி (அவங்க பேரு என்னன்னு தெரியலை – மொத்தமே ரெண்டு காட்சி தான் வாராங்க. ஆனா, கதை ஓட்டத்திற்காக பாருக்கு ஒரு கதை சொல்லுவாங்கல. அவங்க தான். அதுக்காக மட்டும் தான் இவங்க வாராங்க) இவங்க எல்லோருக்கும் ஒரு கிளை கதை இருக்கும். ஆனா என்ன சோகம்னா ஒரு கதை கூட இயல்பான கதை இல்லை. படத்திற்கும் உதவ வில்லை. வெறுமனே காட்சிகளை கடத்த அதாவது நம்ம நேரத்தை கடத்த தான் பயன்பட்டுருக்காங்க.
படத்துல நல்லா இருக்க சில விஷயங்கள்ல தினேஷ் பி கிருஷ்ணாவோட ஒளிப்பதிவு. படம் முழுக்க வரும் சுவர் ஓவியங்கள். “யார் குரலிது” பாட்டு. அவ்ளோ தான். ஒரு நல்ல பீல் குட் படம் கொடுக்க முயற்சி பண்ணி அவங்க நேரம் நம்ம நேரம் எல்லாத்தையும் வீணாக்கியிருக்காங்க. இப்படியே போனா ஓடிடி.ல வரும் படங்களை பாத்தாலே நமக்கு பயம் வந்துடும் போல.
உண்மையில் சார்லி படத்தின் ஒன்லைன் மட்டும் தான் இதுல எடுத்துருக்காங்க. மத்தபடி இதுல இருக்குற எல்லாமும் வேறு வேறு தான். சார்லி பாத்தவங்க… பார்க்காதவங்க என யாருக்கும் இந்தப் படம் கொஞ்சம் அசதிய தான் கொடுக்கும். என்ன எடுத்தாலும் அமேசான் வாங்கிப்பாங்க. வேற வழியே இல்லாம மக்கள் பார்ப்பாங்கன்னு நம்பிட்டு இருக்காங்க போல.
ஒண்ணு மட்டும் சொல்லவா… சில நல்ல விஷயங்களை அப்படியே விட்டுடனும். அப்போ தான் அது நல்லா இருக்கும். இந்த சார்லியையும் அப்படி விட்டிருக்கலாம்.