சினிமா செய்திகள்

நன்றி அண்ணா! சீமானுக்கு நன்றி தெரிவித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்!

Published

on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ‘மாநாடு’ படத்தை பாராட்டி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கைக்கு நன்றி என ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தைப் பாராட்டி சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.

மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்க கலைப் படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட் பிரபு. இஸ்லாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிற போக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறான பிம்பத்தை தகர்த்தெறியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மிகச் சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட் பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம் கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல் மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரை பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறை கொள்கிறேன். அவரது உயரத்தை எண்ணி மனமகிழ்வடைகிறேன்.

அன்புச் சகோதரர் எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத் திறனாலும் படத்தையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன். தம்பி யுவன் ஷங்கர் ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீனின் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்த படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்று காட்டி, வெற்றிப் படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்.

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம் பூரிப்பு அடைகிறேன். நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version