தமிழ்நாடு
மீண்டும் முதல்ல இருந்தா? வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு என அறிவிப்பு!
வங்க கடலில் கடந்த மாதத்தில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்ததன் காரணமாக ஒரு சில நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றி இருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரள கடல்பகுதியில் தோன்றிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே அனைத்து கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்றும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது மழையின் தீவிரம் குறைந்து பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டு வரும் நிலையில் கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை நேற்று நள்ளிரவு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் டிசம்பர் 4 முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் பகுதியில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் அதன் பிறகு மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.