தமிழ்நாடு
கர்ப்பமாக்கிவிட்டு கருவை கலைக்க மாத்திரை கொடுத்த வாலிபர்: இளம்பெண் கண்ணீர்!
இளம்பெண் ஒருவரை காதலித்து அவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய முடியாது பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிடு என வாலிபர் ஒருவர் மிரட்டி கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான கார்த்திகா என்ற பெண்ணும், 25 வயதான கோகுல் என்ற ஆட்டோ ஓட்டுநரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனால் எல்லை மீறி பழகியதில் கார்த்திகா கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கார்த்திகா கோகுலை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் கோகுல் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து தனக்கு ஆதரவாக திருவாரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டனுடன் சென்று அந்த பெண்ணின் குடும்பத்தினரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். ரூ.1.10 லட்சம் ரூபாய் தருவதாகவும் கோகுலை விட்டுவிட்டு கருவை கலைக்க வேண்டும் எனவும் மிரட்டலாக கூறியுள்ளனர். முன்பணமாக 10 ஆயிரம் ரூபாயும் கருகலைப்பு மாத்திரையும் வழங்கி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண் மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். கருகலைப்பு மாத்திரைகளுடன் காவல்நிலைய வாசலில் நின்று ஏமாற்றிய காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் எனவும், அதிமுக ஒன்றிய செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.