இந்தியா
ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு.. கடவுள் அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்..!
ரயில்வே நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கடவுள் அனுமனுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரோனா என்ற மாவட்டத்தில் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரயில்வே துறை சமீபத்தில் கடவுள் அனுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னர் அந்த நோட்டீஸ் வைரல் ஆனதை அடுத்து தவறை உணர்ந்த அதிகாரிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேசம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் சமீபத்தில் ரயில்வே நிலம் அனுமான் கோயிலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து இந்த நோட்டீஸ் கண்ட ஏழு நாட்களுக்குள் ரயில்வே ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றும் ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்து அனுமான் கோயிலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அது மட்டுமின்றி இந்த நோட்டீஸ் அனுமான் கோயிலில் வாசலிலும் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதன் பின்னர் தவறை உணர்ந்த அதிகாரிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பதிகாரி மனோஜ் என்பவர் கூறுகையில், ‘முதல் கட்ட அறிவிப்பு தவறுதலாக வழங்கப்பட்டது என்றும் அதன் பிறகு ரயில்வே நிலம் உண்மையிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் இரண்டு நாட்களுக்கு பின்னர் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த டிசம்பரில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்தது. தாஜ்மஹாலுக்கு வீட்டு வரியாக ரூ.1.47 லட்சத்தையும், தண்ணீர் வரியாக ரூ.1.94 கோடியையும் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 15 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால் தாஜ்மஹால் ஜப்தி செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்பின்னர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு வரி, தண்ணீர் வரி கிடையாது என்பதை உணர்ந்து நோட்டீஸை வாபஸ் பெற்றது.