உலகம்
விஜய் மல்லையாவின் ரூ.200 கோடி மதிப்புள்ள பங்களா: கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வங்கிகளில் ரூபாய் 7 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லண்டனில் விஜய் மல்லையாவுக்கு 20 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் 200 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவை சுவிட்சர்லாந்து வங்கியில் அடமானம் வைத்து அவர் கடன் பெற்றிருந்த நிலையில் அவர் அந்த கடனை 2017ஆம் ஆண்டுக்குள் கட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இதுவரை அவர் பணம் கட்டவில்லை என்பதால் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் அவருடைய பங்களாவை கைப்பற்ற இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து அவருடைய லண்டன் பங்களாவை கைப்பற்றுவதற்கான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ரூபாய் 7,000 கோடி வங்கி மோசடி செய்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கின் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது லண்டனில் உள்ள அவரது பங்களாவை கைப்பற்ற லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.