இந்தியா
தொடங்கிய சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம்!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஒரு சில மணி நேரங்களில் ஒத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. காங்கிரஸ், பாஜக, திமுக உள்பட அனைத்துக் கட்சி எம்பிகளும் தவறாமல் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாராளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 3 வேளாண்மை சட்டங்களை உடனடியாக வாபஸ் செய்யும் மசோதாவை இயற்ற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். சபாநாயகர் எதிர்க்கட்சி எம்பிகளை சமாதானப்படுத்த முயன்றும் தொடர்ந்து எதிர்கட்சிகள் கோஷமிட்டதால் நண்பகல் 12 மணிவரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, சிபிஐ அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் நீடிக்கும் மசோதா, கிரிப்டோகரன்சி தடை செய்யும் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.