தமிழ்நாடு

மகாராஷ்டிராவைப் போன்று தமிழகத்திலும் ஊரடங்கு..!?- சுகாதாரத் துறை செயலாளர் பதில்

Published

on

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் தான் உள்ளது. இதையடுத்து தான் அம்மாநில அரசு, ஊரடங்கு உத்தரவை அமல் செய்துள்ளது. மகாராஷ்டிரா அளவுக்கு இல்லை என்றாலும், தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமெடுத்து தான் வருகிறது. இதனால் மகாராஷ்டிரத்தைப் போல தமிழகத்திலும் ஊரடங்கு அமல் செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். 

‘தற்போது பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் சூழல் இல்லை. ஆனால், அதே நேரத்தில் இது கொள்கை ரீதியான முடிவு. எங்கள் அளவில் எந்த முடிவும் எடுக்க முடியாது. முதல்வருடன் கலந்து ஆலோசிக்காமல் நான் எதுவும் சொல்ல முடியாது.

மகாராஷ்டிராவில் தினந்தோறும் சுமார் 60,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாகத் தற்போது 5.93 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் ஊரடங்கு முடிவை அந்த மாநிலம் எடுத்துள்ளது’ என்று சூசகமான பதிலைக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் முடிந்துள்ள நிலையில், கடந்த 10 ஆம் தேதி தான் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் வரும் நாட்களில் தொற்றுப் பரவல் குறையும் எனப்படுகிறது. ஒருவேளை தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்தால் தமிழகத்தில் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. 

seithichurul

Trending

Exit mobile version