தமிழ்நாடு
LIC தேர்வில் வெற்றி பெற்ற 400 இளைஞர்கள்; 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம்- மதுரை எம்.பி வருத்தம்
எல்.ஐ.சி நிர்வனத்தின் வெற்றி பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் 400 இளைஞர்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து வருத்தம் தெரிவித்து கருத்து கூறியுள்ளார் மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
அவர், ‘எல். ஐ. சி யில் பணி நியமனத் தேர்வில் வெற்றி பெற்று எல்லா நடைமுறைகளும் முடிந்தும் 400 பேர் பணி நியமனத்திற்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். இது குறித்து கடிதங்கள் வரப் பெற்றுள்ளேன். பெற்றோர் என்னை நேரில் சந்தித்தும், அலை பேசியிலும் என்னிடம் பேசினார்கள்.
வேலையில்லா இளைஞர்களின் வலி மிகவும் துயரமானது. இவர்களுக்கோ வேலை வாசல்படி வரை வந்தும் கை வசம் ஆகாமல் உள்ளது. இதில் அவர்களின் தவறு ஏதுமே இல்லை.
சட்ட ரீதியான தடைகள் எனக் கூறப்படுகிறது. தற்காலிக ஊழியர் வழக்கு ஒன்று காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் இறுதி முடிவு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை பொருத்தே அமையப் போவதால் இந்த 400 பேர் நியமனம் எந்த வகையிலும் தடையாய் இருக்கப் போவதில்லை.
ஆகவே எல். ஐ. சி சேர்மன் உடனடியாகத் தலையிட்டு இந்த பிரச்சினையில் உள்ள சட்ட ரீதியான தடைகளை அகற்ற வேண்டும் என அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நிறுவன உலகின் மிகச் சிறந்த உதாரணமாகவும், 20 ஆண்டு போட்டி சூழலில் தனியார்களை எதிர் கொண்டு 70% சந்தைப் பங்கை தக்க வைத்து சாதனையும் புரிந்து வருகிற எல். ஐ. சி க்கு இந்த புதிய ரத்தம், புதிய ஊழியர் நியமனம் இன்னும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.