சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு காலமானார்
பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.
திருச்சியில் பிறந்த கோபு, அவரது இளவயதிலேயே குடும்பத்துடன் சென்னை வந்து சேர்ந்தார். கோபால ரத்தினம் என்ற அவரது முழுப்பெயர், சினிமாவில் டைபிஸ்ட் கோபு என மாறியது. நாகேஷின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்த கோபு, 1959ல் வெளியான நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட்டாக நடித்தார். அதில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய கோபு, அன்று முதல் டைப்பிஸ்ட் கோபு என சினிமா வட்டாரங்களில் அழைக்கப்பட்டார். தொடர்ந்து, படங்களில் அந்த பெயரே அவருக்கு அடையாளமானது.
அதே கண்கள், உயர்ந்த மனிதன், எங்க மாமா, காசேதான் கடவுளடா, மைக்கேல் மதன காமராஜன், உள்ளிட்ட பல வெற்றி படங்களிலும் கோபு குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவரது, மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.