இந்தியா
உலகளவில் நடக்கும் பணிநீக்கங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன?
உலக அளவில் தற்போது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
கூகுள், மைக்ரோசாப்ட், டெல், ட்விட்டர், ஃபேஸ்புக், டிஸ்னி உள்பட பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாம் எவ்வளவுதான் சிறப்பாக வேலை செய்தாலும், நிறுவனத்தில் மிக நீண்ட காலம் பணிபுரித்துக் கொண்டிருந்தாலும் வேலை நீக்கம் என்று வரும்போது அதையெல்லாம் நிறுவனம் பார்க்காது என்பதும் யோசிக்காமல் வேலை நீக்கம் செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திடீரென பணி நீக்க அறிவிப்பு வந்தால் அந்த அதிர்ச்சியில் இருந்து எப்படி சமாளித்துக் கொள்வது? குறிப்பாக பணி நீக்கப்பட்டால் ஏற்படும் நிதி நிலைமையை எப்படி சமாளித்துக் கொள்வது? என்பது குறித்த திட்டங்களை முன்கூட்டியே வகுத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பணி நீக்கங்கள் முதலில் பாதிப்பது நமது நிதி ஆதாரத்தை தான். இனிமேல் சம்பளம் வராது என்ற ஒரு மனப்பான்மை நம் மனதையே திடீரென ஸ்தம்பிக்க வைத்துவிடும். எனவே பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நாம் இப்பொழுது முதலே சில திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற சுக செலவுகள், சுகபோகங்களை குறைத்து அதற்கு பதிலாக பணத்தை சேமிப்பது முக்கியம். தினசரி காபி சாப்பிடுவ,து திரைப்படங்கள் செல்வது, பயணங்கள் மற்றும் வேறு ஏதேனும் அத்தியாவசியமற்ற செலவுகளாக இருந்தால் அவற்றை நிறுத்த வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும்.
பொருளாதாரம் அறிஞர்கள் சம்பளம் வாங்குபவர்களுக்கு கூறும் முக்கிய அறிவுரை நாம் பெரும் வருமானத்தில் 20 சதவீதத்தை சேமிக்க வேண்டும் என்பதுதான். சேமிப்பை தான் முதல் செலவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பத்தாயிரம் சம்பளம் வாங்கினால் கூட அதில் ரெண்டாயிரத்தை சேமித்துக்கொண்டு மீது 8000க்குள் நம் செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
அப்பொழுதுதான் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது நமக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் நம்முடைய சேமிப்பு நம்மை காப்பாற்றும் என்றும் கூறி வருகின்றனர். பணிணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலை இழந்தால் அடுத்த வேலை கிடைத்துவிடும் என்றாலும் சில காலம் ஆகலாம், அதுவரை சம்பளம் வராது, ஆனால் செலவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே அந்த மாதிரியான இக்கட்டான நிலைமையை சமாளிக்க சேமிப்பு என்பது மிகவும் அவசியம்.
ஒரு நல்ல பொருளாதார அறிஞரை சந்தித்து மாத மாதம் எஸ்ஐபி மூலம் சேமித்து வந்தால் அந்த சேமிப்பு ஒரு சில வருடங்களில் லட்சங்களில் அல்லது கோடிகளில் கூட சேரலாம். அந்த சேமிப்பு நமக்கு பணிநீக்க நடவடிக்கையின் போது கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சேமிப்பின் ஒரு பகுதியை தங்கத்தின் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. தங்கம் என்பது மிக எளிமையாக முதலீடு. அவசர காலத்தில் அதை விற்று கொள்ளலாம் அல்லது அடமானம் வைத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சேமிக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் தங்கம் என்பது லாபத்தை தரக்கூடிய அளவில் இருக்கும் முதலீடு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தங்கத்தை ஆபரணங்களாக வாங்குவதற்கு பதிலாக தங்க நாணயங்களாகவோ அல்லது கட்டிக்களாகவோ வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதால் செய்கூலி சேதாரம் கொண்ட தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் சம்பளத்திற்கு பணிபுரியும் ஊழியர்கள் ஊழியர்களுக்கு சேமிப்பு என்பது மிக முக்கியம். தவணை முறையில் கார் பைக் வீடு ஆகியவைகளை வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். திடீரென வேலை போய்விட்டால் அந்த தவணைகளை நம்மால் செலுத்த முடியாது என்பது மட்டுமின்றி இதுவரை செலுத்திய தவணைகளும் வீணாகி நம்முடைய பொருள் நம்மை கையை விட்டு செல்லும் அபாயமும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே கையில் மொத்த பணமும் இருந்தால் மட்டுமே ஒரு பொருளை வாங்குவது குறித்து யோசிக்க வேண்டும்.
பர்சனல் லோன் என்பதை அறவே தவிர்க்க வேண்டும், ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வாங்கினாலும் சரியாக கட்டி விட வேண்டும். மொத்தத்தில் சேமிப்பு ஒன்றே பணி நீக்க நடவடிக்கையில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.