சினிமா செய்திகள்

லாபம்’ படத்தை முடிப்பது யார்? தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

Published

on

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக எஸ்பி ஜனநாதன் அவர்கள் காலமானார். இதனை அடுத்து இந்த படத்தின் மீதி உள்ள பணிகளை முடிப்பது யார் என்பது குறித்தும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயக்குநர்‌ எஸ்‌.பி.ஜனநாதன்‌ படங்களில்‌ தொனிக்கும்‌ கருத்துகளுக்கும்‌ ஒலிக்கும்‌ போராட்டக்‌ குரலுக்கும்‌ என்றைக்கும்‌ முடிவு கிடையாது. அவருடைய படங்களில்‌ வெளிபடுத்தியுள்ள கருத்துகள்‌ யாவும்‌ காலத்துக்கும்‌ பொருந்திப்‌ போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில்‌ ஒன்றுதான்‌ எங்கள்‌ நிறுவனமும்‌ விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும்‌ இணைந்து தயாரித்து விஜய்‌ சேதுபதி நடிப்பில்‌ எஸ்‌.பி.ஜனநாதன்‌ இயக்கத்தில்‌ உருவாகியுள்ள ‘லாபம்‌’ திரைப்படம்‌. இந்தப்‌ படம்‌ திரைக்கு வருவதற்கான இறுதிக்கட்டப்‌ பணிகள்‌ மும்மரமாக நடைபெற்றுக்‌ கொண்டிருந்தன. இந்த தருணத்தில்‌ எங்கள்‌ இயக்குநர்‌ எஸ்‌.பி.ஜனநாதனின்‌ மறைவு மிகுந்த வருத்தமும்‌, வேதனையும்‌ அளிக்கிறது.

அதே சமயம்‌, எங்கள்‌ இயக்குநர்‌ எஸ்‌.பி.ஜனநாதன்‌ ‘லாபம்‌’ படத்தின்‌ அனைத்துப்‌ பணிகளையும்‌ முழுமையாக முடித்துக்‌ கொடுத்துவிட்டார்‌. எஞ்சி இருக்கும்‌ சில பணிகளை எங்கள்‌ படக்குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம்‌. அனைத்து பணிகளையும்‌ முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி வருகிற ஏப்ரல் மாதம்‌ தமிழ்‌ மற்றும்‌ தெலுங்கு ஆகிய மொழிகளில்‌ பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறோம்‌.

எங்கள்‌ இயக்குநர்‌ எஸ்‌.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும்‌, அவரின்‌ ரசிகர்களுக்கான திரைப்படமாகவும் ‘லாபம்‌’ இருக்கும்‌ என்பதில்‌ சந்தேகமே இல்லை.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version