தமிழ்நாடு
பொய் சொல்லும் குஷ்பு, எடப்பாடி…- விளாசிய மா.சுப்ரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பாஜகவின் குஷ்பு மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ‘ஜூன் மாதத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் வீணடிக்கப்பட்டு உள்ளது என்று நடிகை குஷ்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் பொய் பரப்பும் வகையில் கருத்து கூறியுள்ளார்.
நாங்கள் தினம் தினம் எத்தனை எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் வருகின்றன, அதை எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்படிப் பிரித்து அனுப்பப்படுகிறது, எத்தனை தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு உள்ளது என்பன உட்பட பல்வேறு தகவல்களை தொடர்ந்து பொதுத் தளங்களில் திமுக அரசு சொல்லி வருகிறது. ஒளிவு மறைவின்றி அனைத்தையும் கூறி வருகிறோம்.
இப்படி இருக்கையில் குஷ்புவுக்கு எங்கிருந்து அப்படியான தரவுகள் கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியும் இப்படி பொய் பரப்பும் வகையிலும், மக்கள் மத்தியில் குழப்பங்களை உண்டாக்கும் வகையிலும் பொய் சொல்லி வருகிறார்கள். அது எடுபடாது’ என்று தெரிவித்தார்.