தமிழ்நாடு
டூவிலரில் சென்ற 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கே.எஸ்.அழகிரி கண்டனம்
![evm two wheer - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/evm-two-wheer.jpg)
தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது என்பது தெரிந்தது. அந்த அறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இரண்டு பேர் டூவீலரில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றதாக வெளியான தகவலை அடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூடினர். டூவீலரில் சென்ற இருவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியிருப்பதாவது:
இன்று இரவு இவற்றுக்கெல்லாம் மேலாக அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் இருசக்கர வாகனத்தில் மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்தி சென்றவரை பொதுமக்கள் கண்டுபிடித்து, திரைப்பிடித்து காவல்த்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வேளச்சேரி சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாகு அவர்களிடம் கேட்டபோது “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, அப்படி வெளியான செய்தி தவறானது” என்று கூறியிருக்கிறார்.
ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றவரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்தது, பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் தேர்தல் ஆணையம் மறுக்குமேயானால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக திட்டமிட்டு செயல்படுவதாக குற்றம் சாட்ட விரும்புகிறேன்.