தமிழ்நாடு
கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைக்கும் அழகிரி!
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான் என விமர்சித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும் தொகுதி பங்கீட்டிலும் பிஸியாக உள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
மேலும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே அகற்றப்பட வேண்டிய ஊழல் கட்சிகள் தான் என தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது, நாட்டின் இறையாண்மையையும், மதச்சாா்பின்மையையும் காப்பாற்றுவது தான் எங்கள் கூட்டணியின் முதன்மையான நோக்கம். ஒரு சில தவறுகளையும் கட்சிகள் செய்திருக்கலாம். அவற்றை பாா்க்க வேண்டிய நேரம் இது கிடையாது. கமல்ஹாசன் எங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எங்களோடு சோ்ந்து மதச்சாா்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.