தமிழ்நாடு
அதிமுக ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லையென்றால் மோடி வந்து அதிமுகவுக்கு ஆதரவாக ஒட்டுப் போடுவாரா?
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி எப்போது கலையும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆட்சியை கலைத்து தேர்தலை வரவைத்து ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி செய்து வருவதாக வெளிப்படையாக பேசப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும் அல்லது அதிமுக பெரும்பான்மையை பெறாமல் ஆட்சி கவிழும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை வேறுமாதிரியாக அமைந்தது. திமுக 13 இடங்களில் வெற்றிபெற அதிமுக 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை நூழிலையில் தக்கவைத்துக்கொண்டது.
ஆனால் திமுக நம்பர் கேம் விளையாடி ஆட்சியை கலைக்க தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தையும் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் அதிமுக ஆட்சியை கலைக்க திமுகவுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, 100 சதவிகிதம் நாங்கள் ஒத்துழைப்போம். 100 சதவிகிதத்துக்கு மேலாக ஒரு சதவிகிதம் இருந்தால் அதற்கும் ஒத்துழைப்போம். அதிமுகவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது, அதிமுக ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லையென்றால் மோடி வந்து அதிமுகவுக்கு ஆதரவாக ஒட்டுப் போடுவாரா? எனவே, ஆட்சி கவிழ்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தற்போது நூலிழையில்தான் அதிமுகவின் ஆட்சி அதிகாரம் உள்ளது. அது அறுந்துவிழுவதற்கு அதிக காலம் ஆகாது என்றார்.