தமிழ்நாடு
பேரறிவாளன் விடுதலை பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி: அமெரிக்கை நாராயணன்
பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்படுவதாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை கவர்னர் மதிக்காததால் சுப்ரீம் கோர்ட் தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக பாஜக உள்பட கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்த தீர்ப்புக்கு தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இது குறித்து கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் கூறியபோது, ‘ பேரறிவாளன் விடுதலை பணநாயகம் மற்றும் பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.