தமிழ்நாடு

கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தாக்கப்பட்டாரா? என்ன சொல்கிறார்கள் நிரூபர்கள்!

Published

on

கடந்த மாதம் 28-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிரூபர் ஒருவரை பார்த்து நீ என்ன சாதி என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக அவரது சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை நிரூபர்கள் மறுத்துள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு பின்னர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் கிருஷ்ணசாமி. இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி சில இடங்களில் ஒருமையிலும், பல கேள்விகளுக்கு கோபமாகவும் பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவரை பார்த்து கோபமாக நீ என்ன ஊர், என்ன ஜாதி என சர்ச்சைக்குறிய கேள்வியை கேட்டார். இதனால் சக பத்திரிக்கையாளர்கள் கோபமடைய அந்த இடம் பரபரப்பானது. இதனையடுத்து கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளரை பார்த்து என்ன சாதி என கேட்டதற்கு பத்திரிக்கையாளர் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சி தலைவர்களும் கிருஷ்ணசாமியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணசாமி சார்பில் கேள்வி கேட்ட நிரூபர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 நிருபர் கோகுல் மற்றும் புதிய தலைமுறை, ரெட் பிக்ஸ், ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நிரூபர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நிரூபர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட்டது. உண்மையில் யாரை யார் தாக்க வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். புகாரை சட்டப்படி எதிர் கொள்வோம் என கூறியுள்ளனர் நிரூபர்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version