தமிழ்நாடு
நீ என்ன ஜாதி? கிருஷ்ணசாமியின் பேச்சுக்கு திருமாவளவனின் ரியாக்ஷன்!
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். இவர் அங்கு 355870 வாக்குகள் வாங்கினார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் 476156 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பின்னர் இன்று முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் கிருஷ்ணசாமி. இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி சில இடங்களில் ஒருமையிலும், பல கேள்விகளுக்கு கோபமாகவும் பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவரை பார்த்து கோபமாக நீ என்ன ஊர், என்ன ஜாதி என சர்ச்சைக்குறிய கேள்வியை கேட்டார். இதனால் சக பத்திரிக்கையாளர்கள் கோபமடைய அந்த இடம் பரபரப்பானது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் சாதிப் பெயரைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியதாக உங்கள் மூலம் நான் அறிகிறேன்.
கட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பைப் பெற்ற நம்மைப் போன்றவர்கள் சாதி பெயரையோ, எந்த சாதி எனக் கேள்வி எழுப்புவது உள்ளபடியே வருத்தத்துக்கும் வேதனைக்கும் உரியது. அவர் அப்படி கேள்வி எழுப்பியதாகக் கேள்விப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்துகிறேன் என்றார் அவர்.