தமிழ்நாடு
அதிமுக சீட்டுக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசிய கே.பி.முனுசாமி: ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு புகார்!
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது அவரது முதல் ஆதரவாளராக வந்தவர் கே.பி.முனுசாமி. ஆனால் தற்போது காட்சிகள் ஈபிஎஸ்-ஓபிஎஸ்-ஆக மாறிவிட்ட நிலையில் கே.பி.முனுசாமி ஈபிஎஸ் ஆதரவாளராக மாறியுள்ளார். இந்நிலையில் கே.பி.முனுசாமிக்கு எதிரான ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் தரப்பு வெளியிட்டுள்ளது.
அதில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முதலில் 50 ரெடி செய்துவிட்டேன், மீது 50 மாலைக்குள் ரெடியாகிவிடும் என்று கே.பி.முனுசாமியிடம் கூறுகிறார். அதற்கு கே.பி.முனுசாமி, பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கூறுகிறார். இந்த ஆடியோ அதிமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் ஆடியோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தொண்டர்களுக்கு கே.பி.முனுசாமி பற்றி தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆடியோவை வெளியிட்டேன். இதற்கு அவர் பதில்தராவிட்டால் வீடியோவையும் வெளியிடுவேன் என்றார். மேலும் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவும் வெளியிடப்படும் என்றார்.