தமிழ்நாடு
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே துரோகிகள்: அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே அம்மாவின் உயிரை காக்க தவறிய துரோகிகள் எனக்கூறி அக்கட்சியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கடந்த சில மாதங்களாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது என்பதும், அக்கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில் உண்மையான அதிமுக நாங்கள் தான் என ஓபிஎஸ் கூறிவருகிறார்.
இந்த நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆறுமுகசாமி அறிக்கை வந்த பிறகு ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரின் சுயநலமே காரணம் என்று தான் புரிந்து கொண்டதாகவும் ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்காக அனுப்பி இருந்தால் கண்டிப்பாக அவர் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அம்மாவின் உயிரைக் காக்கத் தவறிய ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய துரோகிகளுடன் இணைந்து பணியாற்ற தான் விரும்பவில்லை என்றும் எனவே அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகினாலும் திராவிட பாரம்பரியத்தில் இருந்து விலகவில்லை என்றும் அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்றும் அடுத்தகட்ட முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் கோவை செல்வராஜ் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.