உலகம்
புதிய பிரதமரை நியமிக்கும் கோத்தபயவை நீக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள்: இலங்கை அரசியல் நிலவரம்
இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியிருக்கும் நிலையில் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதால் புதிய பிரதமர் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்றும் அவரது தலைமையின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இலங்கை அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.