தமிழ்நாடு
கூவத்தூர் ரகசிய வீடியோ: கருணாஸ் கைதின் பரபரப்பு பின்னணி!
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தர்ம யுத்தம் தொடங்கியபோது எம்எல்ஏக்களை பாதுகாக்க கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அமைச்சர்கள் செய்த கூத்துக்கள், டீலிங், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் என பல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கூவத்தூரில் அரங்கேறிய அனைத்திற்கும் கருணாஸின் புலிப்படை பக்கபலமாக இருந்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை வெளியிட்டால் அது ஆட்சி கவிழும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வீடியோவாக கருதப்படுகிறது. இந்த வீடியோக்கள் தற்போது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கருணாஸ் எடப்பாடிக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளதால் அந்த வீடியோக்களால் தனது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என ஆளும் தரப்பு கிலியில் உள்ளது. எனவேதான் கருணாஸுக்கு பாதுகாப்பாக இருந்த வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கருணாஸையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது வேலூர் சிறையில் உள்ள கருணாஸுக்கு வீடியோவை கேட்டு சித்திரவதை நடப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஒருவேளை அந்த வீடியோ வெளியே கசிந்தாலோ அல்லது திமுக தரப்பிடம் சிக்கினாலோ தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரும் புயலே வீசும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். கருணாஸ் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் நெருக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.