தமிழ்நாடு
கூவத்தூர் பழனிச்சாமி சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி ஆவேசம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும்போது தற்போது ஆட்சியில் இருக்கும் கூவத்தூர் பழனிச்சாமி உள்பட பலர் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள் என சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சரும், அமமுகவில் மாநில அமைப்பு செயலாளருமாகவும் இருந்த கரூர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை கரூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, ஏதோ கூவத்தூரில் குறுக்கு வழியில் படிபோட்டதால் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகிட்டு, இந்த நாட்டு மக்களுக்கு துரோகத்தைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, தம்பிதுரை உள்பட எல்லாருமே தங்கள் மீது வழக்கு வரக்கூடாது என்பதற்காக தமிழக மக்களின் உரிமைகளை, நலனை, மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டு தமிழக மக்களுக்கு எதிரான ஆட்சியை செய்துகொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஸ்டாலின் முதலமைச்சராக பொறுபேற்கும்பொழுது இந்த ஆட்சியில் இருக்கின்ற கூவத்தூர் பழனிசாமி உள்பட பலபேர் திருச்சி மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, சென்னை புழல் சிறை உள்ளிட்ட இடங்களில் கம்பியை எண்ணிக்கொண்டிருப்பார்கள் என கடுமையாக விமர்சித்தார் செந்தில் பாலாஜி.