தமிழ்நாடு
மக்கள் விரும்பினால் கொங்குநாடு உருவாகும்: பாஜக வழக்கறிஞர் அஸ்வத்தாமன்
மக்கள் விரும்பினால் கொங்குநாடு என்ற புதிய மாநிலம் உருவாகும் என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வரும் திமுக அரசுக்கு பதிலடியாக தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அவர்கள் மாநில அரசை இரண்டாக பிரிக்கவோ, கூடுதலாக ஒரு யூனியன் பிரதேசத்தை உருவாக்கவோ மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் ஆனால் அந்த பகுதி மக்கள் முழு விருப்பத்துடன் அது நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். எனவே மக்கள் விரும்பினால் கண்டிப்பாக கொங்குநாடு உருவாகும் என்றும் அவர் கூறினார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கடந்த 60 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கோவை மக்களுக்கு தொடர்ச்சியாக தமிழக அரசு வஞ்சித்து வருகிறது என்றும், ஆனால் சென்னையில் 2,500 கோடிக்கு பூங்கா கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தான் கொங்கு நாடு என்ற முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொங்கு நாட்டு மக்கள் விரும்பினால் கண்டிப்பாக கொங்குநாடு என்ற புதிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் பெரும்பாலான வருவாய் கொங்கு மண்டலத்தில் இருந்து தான் வருகிறது என்றும் ஆனால் அந்த கொங்கு மண்டலத்திற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்காமல் வஞ்சிதுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.