கிரிக்கெட்

INDvENG – நின்று அடிக்கும் கோலி – அஷ்வின் ஜோடி; அதிரடி அரைசதங்கள்!!!

Published

on

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் பேட்டிங் தான். இருவரும் இன்று அதிரடி அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில் விளையாடி வருகிறது. நேற்று வரை இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த இந்தப் போட்டி இன்று காலை இங்கிலாந்துக்குச் சாதகமாக மாறியது. அதற்கு காரணம், இன்று காலை போட்டித் தொடங்கியது முதல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தான். தற்போது இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலியும், ஆல்-ரவுண்டர் அஷ்வினும் தற்போது அரைசதங்கள் கடந்து களத்தில் உள்ளனர். இந்தியா, தற்போதைய நிலையில் இங்கிலாந்தை விட 285 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் இன்றைய போட்டியில் திணறிய போது, அதை இந்த இரு பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆடியது பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இனி இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி, அடுத்து வரும் இரண்டு நாட்களில் போட்டியை டிரா செய்ய அதிக முயற்சிகள் எடுக்கும். ஆனால், சுழலுக்கு மிகச் சாதகமாக உள்ள சென்னை பிட்ச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிப்பது மிகக் கடினமானதாக இருக்கும்.

Trending

Exit mobile version