தமிழ்நாடு
கொடநாடு கொலை: இன்னும் இருக்கிறது நிறைய ஆதாரம்!
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்ட ஆவணப்படமும் அதனை தொடர்ந்த பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்கள் இந்த விவகாரத்தில் தங்கள் கவனத்தை செலுத்தாமல் புறக்கணித்தாலும் அரசியல் வட்டாரத்தில் இது புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தான் வெளியிட்டது வெறும் 5 சதவீதம் தான் எனவும் மீதமுள்ளதை வெளியிட்டால் அவ்வளவுதான் என மேத்யூஸ் தனது நெருங்கிய வட்டாரங்களில் கூறியதாக கூறப்படுகிறது.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை ஊடகங்கள் புறக்கணித்து வந்ததால் சற்று வறுத்தத்தில் இருந்த மேத்யூஸ்க்கு எழும்பூர் மாஜிஸ்திரேட் சரிதாவின் மிகச் சரியான தீர்ப்பு இன்னும் தீவிரமாகச் செயல்படுவதற்கு ஊக்கமளித்துள்ளது. சயன், மனோஜை சிறைக்கு அனுப்ப முடியாது என விடுதலை செய்த நீதிபதியின் அதிரடி மேத்யூஸ்க்கு ஊக்கத்தையும், எதிர் தரப்புக்கு சறுக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊக்கத்தால் தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசிய மேத்யூஸ், கொடநாடு விவகாரத்தில் நான் இதுவரை வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான். மீதம் இருப்பவற்றையும் வெளியிட்ட பின்பு இதுவரை பேசாத மீடியாக்களும் பேசாமல் இருக்க முடியாது என கூறியதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் என்னென்ன இந்த கொடநாடு கொலை விவகாரத்தில் வர இருக்கிறதோ என்பதை அறிய அரசியல் வட்டாரம் பரபரப்பாக காத்திருக்கிறது.