தமிழ்நாடு
நெல்லையில் பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து: முன்பகை காரணமா?
நெல்லையில் பெண் எஸ்ஐ ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர் .
இந்த நிலையில் பெண் எஸ்ஐ மார்க்ரெட் கிரேஸி என்பவர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த ஒருவருக்கும் பெண் எஸ்.ஐ. மார்க்ரெட் கிரேஸிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த வாக்குவாதத்தின் போது திடீரென அந்த மர்ம நபர் கத்தியை எடுத்து மார்க்ரெட் கிரேஸியை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண் எஸ்ஐ போலீஸ்காரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .
இந்த நிலையில் பெண் எஸ்.ஐ. மார்க்ரெட் கிரேஸியை கத்தியால் குத்தியவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் ஆறுமுகம் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக மார்க்ரெட் கிரேஸி அவருக்கு அபராதம் விதித்ததாகவும் தெரிகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக அவர் கோவில் திருவிழாவின்போது மார்க்ரெட் கிரேஸிyஐ கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
நெல்லை கோவில் திருவிழாவின்போது பெண் எஸ்.ஐ கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.