தமிழ்நாடு
புதுவை வந்தார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. மக்கள் பலர் வெளியேற்றம்!
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில துணை நிலை ஆளுநர் எதிராக இருப்பதாக கூறி முதல்வர் நாராயணசாமி போராடி வருகிறார். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயண சாமியின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பொது மக்களும் கணிசமான அளவில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.
ஆளுநர் மாளிகைக்கு வெளியே இந்த போராட்டம் நடப்பதை அடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்னும் அவர் புதுச்சேரி திரும்பவில்லை. இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் அவர் புதுச்சேரி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி துணை ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் இன்று மாலை ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை இவர்கள் 6 மணி அளவில் ஆலோசிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கான முறையான அழைப்பு இன்னும் வரவில்லை என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.