உலகம்
மோசமான நிறவெறி டிவிட்.. நாராயணசாமியை கிண்டல் செய்த கிரண்பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் செய்து வருகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக இவர் போராடி வருகிறார்.
முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி டிவிட் ஒன்று செய்துள்ளார். அதில் ”என்னிடம் செய்தியாளர் ஒருவர் தர்ணாவும் ஒருவகை யோகாவா? என்று கேட்டார், நான் அவரிடம் ‘ஆமாம், ஆனால் அது சூழ்நிலையை பொறுத்தது, நீங்கள் எதற்காக அமர்ந்துள்ளீர்கள், என்ன ஆசனம் செய்கிறீர்கள், என்ன சத்தம் எழுப்புகிறீர்கள் என்பதை பொறுத்தது’ என்று கூறினேன்.” என்று கிரண்பேடி டிவிட் செய்துள்ளார்.
இதுதான் தற்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. இதில் கிரண்பேடி இரண்டு காக்கைகள் புகைப்படத்தையும் பதிவேற்றி இருக்கிறார். அதன் கீழே காக்கைகளின் யோகா என்று எழுதி இருக்கிறார். நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமாக அவர் இந்த புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினர் புகார் வைத்து வருகிறார்கள்.