இந்தியா
இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட கே.எப்.சி. நிறுவனம்: ஏன் தெரியுமா?
உலகெங்கும் கிளைகள் கொண்ட பிரபல உணவு நிறுவனமான கேஎஃப்சி இந்தியாவிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் தனது உணவு சாம்ராஜ்யத்தை விரிவடையச் செய்து உள்ள நிறுவனம் கே.எப்.சி. என்பதும் இந்த நிறுவனத்தின் சிக்கன் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கே.எப்.சி. நிறுவனத்தின் சமூகவலைத்தள பக்கத்தில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்யப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ள பதிவு என்று பலர் எதிர்ப்பு குரல் கொடுத்ததை அடுத்து சில நாட்கள் மௌனத்திற்குப் பின் தற்போது கே.எப்.சி. நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
கே.எப்.சி. டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவுக்கு வெளியே இயங்கக்கூடிய சில கிளைகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய பதிவுகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம் என்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க விரும்புகிறோம் என்றும் அனைத்து இந்தியர்களுக்கும் நாங்கள் சேவை செய்வதை பெருமையாக கருதுகிறோம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே போன்ற ஒரு சமூக வலைத்தள பதிவை பீட்சா ஹட் நிறுவனமும் செய்து அதன் பின் மன்னிப்பு கேட்ட நிலையில் தற்போது கே.எப்.சி. நிறுவனமும் சர்ச்சைக்குரிய பதிவுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.