இந்தியா
கேரள கன்னியாஸ்திரீ பாலியல் பலாத்காரம்: பிஷப் பிராங்கோ அதிரடி கைது!
கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் அங்குள்ள பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கன்னியாஸ்திரீகள் போராட்டம் நடத்தி நியாயம் கேட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்துக்கு பிஷப் குறித்து கடிதம் ஒன்று எழுதினார். அதில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பிஷப் 13 முறை தன்னை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
இதற்கிடையில் பிஷப் முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் கேரள சிறப்பு விசாரணைக்குழு கடந்த மூன்று நாட்களாக பிஷப் பிராங்கோவிடமும், பதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீயிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் பிஷப் பிராங்கோ மீது உள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிஷப் பிராங்கோவை கோட்டயம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து கன்னியாஸ்திரீ மற்றும் பிஷப்பை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்படும் முதல் கத்தோலிக்க பிஷப் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.